புதுதில்லி:
2020 -21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் மைனஸ் 8.6 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும்; இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் இந்தியா நுழைய உள்ளதாகவும் ரிசர்வ் வங்கிஅண்மையில் கணிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், பணவீக்கம் மற்றொரு அபாயமாக உருவெடுத்து இருப்பதை, மத்திய அரசின்புள்ளியல் மற்றும் திட்ட அமலாக் கத்துறை அமைச்சகம் (MoSPI) சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index - CPI) தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் சில்லரை விலைப் பணவீக்கம்கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2020 அக்டோபரில் 7.61 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2020-21 நிதியாண்டில், சில்லரை விலைப் பணவீக்கத்தை 4 சதவிகித வரம்பிற்குள் வைத்திருக்க வேண் டும் என்பது மத்திய அரசு இலக்கு ஆகும்.ஆனால், செப்டம்பர் மாதத்தின் போதே சில்லரை விலைப் பணவீக்கம் 7.34 சதவிகிதத்திற்குப் போனது. பின்னர் அது, 7.27 சதவிகிதமாக திருத்தப்பட்டது. ஆனால், அக்டோபரில், 7.61 சதவிகிதத்தை சில்லரை விலை பணவீக்கம் எட்டி, பயமுறுத்தியுள்ளது.மேலும், இந்த சில்லரை விலைப் பணவீக்கத்திற்கு உணவுப்பொருள் விலைவாசி உயர்வே முக்கியக் காரணம் என்ற புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளன.
நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (Consumer Food Price Index - CFPI) அல்லது உணவு விலைப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 10.68 சதவிகிதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 11.07 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தக் காலத்தில் காய்கறி விலை 22.51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. காய்கறிகளைத் தவிர, முட்டை 21.81 சதவிகிதம், இறைச்சி மற்றும் மீன் பொருட்கள்18.70 சதவிகிதம், பருப்பு வகைகளின் விலை 18.34 சதவிகிதம், எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்களின் விலை 15.17 சதவிகிதம் என அதிகரித்துள்ளன.ஒட்டுமொத்தமாக, சில்லரை விலை பணவீக்கத்தில், வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டை,மாமிசம், தக்காளி போன்ற அடிப் படை உணவுப் பொருட்களின் விலைஉயர்வே 46 சதவிகிதம் அளவிற்கு பங்கு வகித்துள்ளதுஇந்தியாவில் கடந்த 3 மாதத்தில்வெங்காயம் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் சோயா ஆயில் விலை 23 சதவிகிதம் உயர்ந்துள்ளது.ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங் களை நேரடியாகப் பாதிக்கும் சில்லரை பணவீக்கமானது மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வானது, 2020 அக்டோபரில், 6 வருடம் இல்லாத உயர்வை அடைந்த நிலையில், அது மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மழை - வெள்ளம் காரணமாக வேளாண் பொருட்கள் சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு விலைவாசி அதிகரிப்பை தடுக்கமுடியாது என்றும், இது சில்லரை விலைப் பணவீக்கத்தை மேலும்அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.